எண்ணை பரவலால் தொழிலுக்கு செல்லாத மீனவர்கள்

தீ விபத்தின் எதிரொலி தொழிலுக்கு செல்ல மறுத்த மீனவர்கள்
சங்கமன்கந்தை கடற்பரப்பில் 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“MT NEW DIAMOND“ என்ற பனாமா அரசுக்கு சொந்தமான கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன் தீ விபத்துக்குள்ளாகி கடும் சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையுடன் ஏனைய நாடுகள் இணைந்து குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இருந்த போதிலும் இத்தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாது என பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் என்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இவ்வெண்ணெய் பரவலானது விபத்திற்குள்ளன கப்பலின் எண்ணெய் கசிவா அல்லது வேறு படகில் இருந்து வெளியாகிய எண்ணெய் கசிவா என அறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த விபத்து தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மாநகர சபைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.
இதே வேளை இவ்எண்ணெய் பரவலின் எச்சங்கள் கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்களில் தென்படுவதை காண முடிந்த காரணத்தால் இன்று கரையோர மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.