பாராகிளைடிங் சாகசத்தில் விபரீதம்… 50 அடி உயர மின்கம்பத்தில் சிக்கி தவித்த இளம்பெண்

கேரள மாநிலம் வர்கலாவில் பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும் போது 50 அடி உயர மின்கம்பத்தில் சிக்கிய தமிழக பெண் உட்பட அவரது பயிற்சியாளரும் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.
கோயம்புத்தூர் சேர்ந்த பவித்ரா என்ற பெண் தனது பயிற்சியாளர் சந்தீப் என்பவருடன் சேர்ந்து திருவணந்தபுரத்தை அடுத்த வர்க்கலா கடற்கரை பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காற்றின் திசை மாறி அங்கு பணி முடியாத நிலையில் இருந்த 50 அடி உயர மின்கம்பத்தில் சிக்கினர்.
இளம்பெண்ணும் பயிற்சியாளரும் மின்கம்பத்தில் சிக்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மின்கம்பத்தின் கீழ் வலைகளை விரித்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மின்கம்பத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க ஏற்பாடுகளை செய்தனர். இருவரும் அந்த வலையில் விழுந்து சிறுசிறு காயங்களுடன் உயர் தப்பியுள்ளனர். விபத்து குறித்து அவர்கள் கூறுகையில், ” நாங்கள் பயன்படுத்தும் பாராகிளைடர் மோட்டார் வகையை சார்ந்ததல்ல கைகளால் இயக்கும் வகையை சார்ந்தது. காற்றின் திசை திடீரென மாறுபட்டதால் நாங்கள் மின் கம்பத்தில் சிக்கிக்கொண்டோம் எனக் கூறினர்.