தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காவாறு பேரணியை நடத்த வேண்டும்.இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல் துறையிடம் விண்ணப்பிக்க ஆர்எஸ்எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கின்போது, ‘பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு வாதம் செய்தது.
ஆர்.எஸ்.எஸ் தரப்பில், ‘சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை. அதற்காக பேரணியைத் தடுப்பது நியாயமல்ல. தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்கக் கூடாது’ என்று வாதிட்டது. இரு தரப்பு வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.