குரங்கு குல்லா திருடர்கள்: பீதியில் மதுரை மக்கள்

மதுரை புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து திருடும் குரங்கு குல்லா திருடர்களால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை புறநகர் பகுதிகளான சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி மற்றும் பொதும்பு உள்ளிட்ட பகுதிகள் சமீப காலமாக விரிவாக்கம் பெற்று வருகின்றன.

இங்கு நூற்றுக்கணக்கில் வீடுகள் பெருகி மக்கள் குடியேறி உள்ளனர். இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக குரங்கு குல்லா அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சுமார் பத்து பேர் கொண்ட கும்பல் மூன்று பேர் வீதமாக பிரிந்து திருட செல்கின்றனர். வெவ்வேறு பகுதிகளை குறி வைத்து கும்பலாகச் சென்று வெளியில் நோட்டமிடுகின்றனர். ஆளில்லாத வீடுகள் தவிர, ஆள்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் இவர்கள் தைரியமாக புகுந்துவிடுகின்றனர்.

கையில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் திருடவரும் இவர்கள், வீட்டுக்குள் உள்ளவர்களைக் கடுமையாகத் தாக்கி கொள்ளையடிக்கவும் துணிந்துள்ளனர்.

நேற்று கோவில் பாப்பாகுடி ஏ.ஆர். சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளையர்கள் அங்குள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் நுழைந்துள்ளனர். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாகப் பார்த்த நபர்கள் அதனையும் அடித்து நொறுக்கி விட்டு வீட்டிற்குள் குதித்து பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது கோபத்தில் அவர்மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டியிடமும் செயினை பறித்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் நேற்று ஓர் இரவில் மட்டும் நான்கு வீடுகளில் இதே போல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண்சேறு பூசியபடியும் கைகளில் கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா, டவுசர் அணிந்தபடி திருட்டில் ஈடுபடுகிறார்கள் இவர்கள்.

இந்த ‘குரங்கு குல்லா’ திருடர்களால் மக்கள் பீதியில் உள்ளனர். ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னரே காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.