தெலங்கானாவில் 100% எம்பிபிஎஸ் சீட்டுகளும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கீடு!

தெலங்கானாவில் 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலங்கானா மாநில மருத்துவ சேர்க்கை விதிமுறையின்படி, மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 85 சதவிகித சீட்டுகள் மட்டுமே தெலுங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளன. இதில், 1,895 சீட்டுகள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவிகித சீட்டுகள் பொதுவாக அனைத்து மாநில மாணவர்களையும் சேர்த்து வருகின்றனர். இந்த 15 சதவிகித இடங்களை பிடிக்க ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பெரும்பாலான சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளது. இதில், 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் நிர்வாக ஒதுக்கீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.