வயோதிபத் தம்பதி வெட்டிப் படுகொலை – தென்னிலங்கையில் பயங்கரம்.

வயோதிபத் தம்பதியினர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி – இக்கடுவை பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகள் இல்லாத இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த வேளை கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

72 வயதுடைய கணவனும், 68 வயதுடைய மனைவியும் வீட்டிலிருந்து நேற்று மாலை 6 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு அயல்வீட்டுக்காரர் ஒருவர் நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.

பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த வயோதிபத் தம்பதியினரின் வீட்டுக்கு நேற்று மாலை 4 மணியளவில் ஓட்டோ ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் சென்றிருந்தார்கள் என்று அயல்வீட்டுக்காரர்கள் இருவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.