“நான் 3வது முறையாக பிரதமராகும் போது இது நடக்கும்… ” – பிரதமர் மோடி

மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகும்போது, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம், ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை ஒட்டி, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் கட்டடம், சுமார் இரண்டாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டது. 3வது தளத்தில் 7 ஆயிரம் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பாரத் மண்டபம் என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவை ஒட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தாம் முதன்முறை ஆட்சி அமைக்கும்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்ததை சுட்டிக்காட்டினார்.
தனது இரண்டாவது பதவிக் காலத்தில், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தாம் மீண்டும் ஆட்சியமைக்கும்போது, இந்தியாவை 3வது இடத்திற்கு கொண்டு செல்வேன் என தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் நலத்திட்டங்களே இதனை சாத்தியமாக்கியதாகவும் தெரிவித்தார். கடமைப் பாதையைப் போன்று, பாரத் மண்டபம் என்ற பெயர் மாற்றத்திற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, நல்ல விஷயங்களை தடுத்து, அதன் மீது அவதூறு பரப்புவதே சிலரது குணம் என விமர்சித்தார்.