விசுவமடுவில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலின் நான்காம் நாள் நிகழ்வு நேற்று விசுவமடுவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
விசுவமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மாலை 5 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை இரண்டு மாவீரர்களின் சகோதரனும் தேராவில் துயிலும் இல்லப் பணிக்குழு செயலாளருமான யோகன் ஏற்றிவைத்தார். தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கான மலர்மாலையை ஞானசௌந்தரி அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வை விசுவமடு பிரதேச தென்னிந்திய திருச்சபையின் பங்குத்தந்தை வணபிதா அசோகன் அடிகளார் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தலைமை அஞ்சலி உரையை நிகழ்வுக்குத் தலைமை வகித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் நிகழ்த்தினார். தொடர்ந்து வணபிதா அசோகன் அடிகளாரும் அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.