யாழ். நகரில் கடைகள், சொத்துக்களை எரிக்க பெல்ஜியத்தில் இருந்து 12 இலட்சம் ரூபா ‘டீல்’ – மூவர் வசமாகச் சிக்கினர்.

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்து அழிந்தன. அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. இதைவிட மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இவை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாள் என்பனவும் மீட்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் அவர்கள் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடைகளை எரிப்பதற்காக 12 இலட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 இலட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தின் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக்கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றச் செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு , 12 வருட கடூழிய சிறை!