நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்து கொள்ளுங்கள்! – ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு.

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறு ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரேலிய பேர்த் நகரில் வசிக்கும் ஆஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்படி அழைப்பை அவர் விடுத்தார்.
இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது குறித்து புலம்பெயர் இலங்கையர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அவற்றுடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையைக் கட்டியெழுப்ப அரசு ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தைப் பாராட்டிய புலம்பெயர் இலங்கையர்கள், காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாட்டின் முன்னேற்றத்துக்காக நீண்டகால கொள்கைத் திட்டங்களைச் செயற்படுத்த அரசு அர்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தௌிவூட்டினார்.
புலம்பெயர் இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை பேர்த் நகரில் ஆரம்பிக்க அரசு தீர்மானித்திருக்கின்றது என்று இங்கு சுட்டிக்காட்டிய தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கை புலம்பெயர் சமூகம் அதனூடாக அரசுடன் வலுவான முறையில் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் தெரிவித்தார்.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட நிர்வாக தீர்மானங்கள் தொடர்பான அறிக்கை உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குப் புலம்பெயர் இலங்கையர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக வௌிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசு ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டம் குறித்து வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் இங்கு விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகள் சித்ராங்கனி வாகீஷ்வர, நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, மேற்கு ஆஸ்திரேலியாவின் இலங்கை கொன்ஸூலர் ஜெனரல் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.