தேர்தலை எப்படி நிறுத்தலாம்? இப்படி யோசிக்கின்றது அரசு – டலஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு.

“ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது.”
இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“எந்தத் தேர்தல் முதலில் நடக்கும்? ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா?” – என்ற கேள்விக்கு அவர்
பதிலளிக்கும்போது,
“எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு தேர்தல்களை ஒத்திப்போட்டுள்ளது.
வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலை 6 வருடங்களுக்கு ஒத்திப்போட்டது இந்த ஐக்கிய தேசிய கட்சி. தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து கள்ள வாக்குகளைப் போட்டுத் தங்களுக்குத் தேவையான முடிவைப் பெற்றுக்கொண்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு. அதனூடாக நாடாளுமன்றத் தேர்தலை 6 வருடங்களுக்கு ஒத்திப்போட்டது.
அப்படிப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இப்போது ஜனாதிபதியாகி இரண்டு தேர்தல்களை (உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்) ஒத்திப்போட்டுள்ளார். இதனால், ரணில் விருப்பத்தோடு தேர்தலை நடத்துவார் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அவர் தேர்தலை நடத்தும் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை.
ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதம் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசமைப்பு சொல்கின்றது.” – என்றார்.
“நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று
சொல்லப்படுகின்றதே?” – என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது,
“அதைச் செய்வதாக இருந்தால் இரண்டு முக்கிய விடயங்கள் தேவை. ஒன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை தேவை. அடுத்தது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் ஒக்டொபரில் நடத்தப்பட வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் செய்வதற்குக் காலம் போதாது.
முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக அரசு இந்த மாதிரியான விடயங்களை வெறுமனே பேசுபொருளாக்குகின்றது.
அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. எப்படி தேர்தலை நிறுத்தலாம் என்று அரசு யோசிக்கின்றது.
அப்படியான திட்டங்களில் ஒன்றுதான் இதுவும்.” – என்றார்.