அதிக வெப்பத்தால் திருமலையில் ஒருவர் மயங்கி வீழ்ந்து சாவு!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் இன்று மதியம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்து வரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயங்கி வீழ்ந்த அவர், உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், வெயிலில் நின்று வயல் வேலை செய்கின்றவர்கள் வெயிலின் உச்சமான நேரங்களில் வயல் வேலை செய்வதைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.