இந்த அரசை விரட்டியடிக்க எதிரணிகளை ஒன்றிணையுங்கள்! – சந்திரிகாவிடம் டிலான் வேண்டுகோள்.

ரணில் – ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டவர்கள் அரசு பக்கமே உள்ளனர். இதே வழியில் சுதந்திரக் கட்சி பயணித்தால் யானை விழுங்கிய விளாம்பழத்தின் நிலையே சுதந்திரக் கட்சிக்கு ஏற்படும்.

அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் இருக்கவும், ஊழல்மிகு இந்த அரசை விரட்டியடிப்பதற்காகவும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் இணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு சந்திரிகா அம்மையாருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

இன்னும் ஐந்து பௌர்ணமி தினங்களுக்குள் இந்த அரசு நிச்சயம் விரட்டியடிக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.