10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் நாளை இந்தோனேசியா பயணம்!

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (18) இந்தோனேசியா பயணமாகின்றார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கின்றார்.

‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியுடனான விஜயத்தில் ஜனாதிபதி செயலக மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் இணைந்துகொள்கின்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.