நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு.

நாகப்பட்டினத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி வழியாகத் தொடங்கி வைத்தார்.

இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 7,670 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.

முதல் நாளில் போதிய பயணிகள் வரவில்லை. இதனால் 75 விழுக்காடு சலுகையுடன் மொத்தமாக ரூ.2,803 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இருப்பினும் இரண்டாவது நாளிலும் ஏழு பேர் மட்டுமே பயணம் செய்ய வந்ததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நாகப்பட்டினம்-காங்கேசன் துறைமுகப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாள் என மாற்றப்பட்டது.

அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாள்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பிற்குப் பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

மேலும் கனமழையால் இந்தப் பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இத்தகைய சூழலில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது என்று தினத்தந்தி தகவல் தெரிவித்தது.

இந்தியர்களுக்கு விசா கிடையாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்தக் கப்பலில் இலங்கை செல்ல கடவுச்சீட்டு மட்டுமே போதுமானது.

இதனிடையே அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே 10ஆம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வராததால் போக்குவரத்து 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் மே 17ஆம் தேதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை தற்போது 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.