சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி!

சிதம்பரம் அருகே குத்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிரிவலவன் மற்றும் கலையரசன் இருவரும் கல்லூரிப் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு, தினக்கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், பரங்கிப்பேட்டைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் குத்தாபாளையம் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை(மே 24) நள்ளிரவு 11 மணிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி வந்த அரசுப்பேருந்து, இளைஞர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கிரிவலவன்(21) மற்றும் கலையரசன்(21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம், அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசார் கண்முன்னே அரசுப்பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை சாலையில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

மேலும், விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். பின்னர் வாலிபர்கள் உடலைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.