சைக்கிளில் கடைக்குச் சென்ற இரு சிறுமிகள் நீர்நிலையில் இருந்து சடலங்களாக மீட்பு! – யாழ். ஊர்காவற்றுறையில் சம்பவம்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்பவர்களே இன்று இரவு 8 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேற்படி இரண்டு சிறுமிகளும் மாலை சைக்கிளில் கடைக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கடைக்குச் சென்ற சிறுமிகளைக் காணவில்லை எனத் தேடிய உறவினர்கள், வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலையில் அவர்களது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்தனர். அவர்கள் பயணித்த சைக்கிளும் அங்கு காணப்பட்டது.

இருவரும் சைக்கிளுடன் தவறுதலாக நீர்நிலையில் வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இருவரது சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.