சல்மான் கான் மீது தாக்க சதித்திட்டம் – 4 பேர் கைது!

நடிகர் சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேரை நவி மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நவி மும்பையின் பன்வெல் பகுதியிலுள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரைத் தாக்கத் திட்டமிட்டதாகக் கடந்த மாதம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்ததாகவும், இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 – பி (சதித்திட்டம் தீட்டுதல்), 506 (அச்சுறுத்தும் வகையில் மிரட்டுதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையிலுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது தம்பி அன்மோல் பிஷ்னோயுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் வழிகாட்டுதலிலேயே இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோய் உள்பட 17 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் மாநிலம் சபா்மதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது தம்பி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்கா அல்லது கனடாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு வெளியே கடந்த ஏப்.14-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, பிகாரைச் சோ்ந்த விக்கி குப்தா, சாகா் பால் ஆகியோரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் இரு நாட்டு துப்பாக்கிகளை வழங்கியதாக சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன் ஆகிய இருவா் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனா். தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதன்பேரில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதில், அஜய் தாபன் கடந்த மே.1 அன்று போலீஸ் காவலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது மேலும் சிலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.