யாழ். ஊடகர் பிரதீபனின் வீடு மீதான தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீடு மீது தாக்குதல் நடத்தி வாகனங்களுக்குத் தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி யாழ். நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோயில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டுக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரியுமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில், அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த மூவரை அச்சுவேலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.