ஜெய்சங்கர் – ரணில் சந்திப்பு.

இந்திய – இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும்
வகையில் 3 அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்குக் கையளிப்பு

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று பகல் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேற்படி சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயத்தை அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ளர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இந்திய வௌிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமானதோடு, இரு நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர் இருதரப்பு பேச்சு ஆரம்பமாகியது.

இதன்போது, இந்திய – இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 3 அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சரினால் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 106 வீடுகளின் டிஜிட்டல் பெயர் பலகையும் ஜனாதிபதியும், இந்திய வௌிவிவகார அமைச்சரும் திறந்து வைத்தனர்.

கொழும்பு – திருகோணமலையின் இரண்டு மாதிரிக் கிராமங்களில் அமைக்கப்பட்ட தலா 24 வீடுகளை ஜனாதிபதியும், இந்திய வௌிவிவகார அமைச்சரும் மக்கள் பாவனைக்காக கையளித்தனர்.

இந்தியாவின் 06 மில்லியன் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையில் சமுத்திர மீட்பு தொடர்பாடல் மையமும் ஜனாதிபதி மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், அம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும்.

வௌிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.