கள்ளக்குறிச்சி சம்பவம்: முக்கிய நபர் கைது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தியவா்களில் தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர், சென்னையில் அவருடைய உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த கள்ளச்சாராய வியாபாரி மதன்குமாரும், கடலூர் மாவட்டம், தம்பிக்கோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் மதன்குமாா் 2023, மே மாதம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலா் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.