இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளை உயிரிழந்த கடற்படைச் சிப்பாய்க்கு யாழ். கடற்றொழிலாளர்கள் இரங்கல்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்களை இழுவைப் படகுடன் கைது செய்ய முற்பட்டபோது இலங்கைக் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய இழுவைப் படகுகள் எமது கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்ச்சியாக அழித்து வருகின்றது.

இதன் காரணமாக நாம் இலங்கைக் கடற்படையினருக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய மீன்பிடியாளர்களை அவர்கள் கைது செய்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை இந்திய இழுவைப் படகைக் கைது செய்ய முற்பட்டபோது கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக இந்திய மீனவர்களுடன் போராடிய அந்தக் கடற்படைச் சிப்பாய்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடற்படைச் சிப்பாய் உயிரிழந்துள்ள நிலையில் எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை.

இந்திய மீனவர்களிடம் நாங்கள் விநயமாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில், உங்கள் கடல் எல்லையைத் தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம். அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காகக் கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.