மொட்டும் யானையும் தனிவழியில் சென்றால் இரண்டு தரப்புகளுக்கும் பின்னடைவு ஏற்படும்! – இப்படி எச்சரிக்கின்றார் திஸாநாயக்க எம்.பி.

“மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆசியுடன் களமிறங்கினால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார்.அவ்வாறு இல்லாவிட்டால் தோல்வியே ஏற்படும்.

ரணிலைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதிப் பதவிக்கு மொட்டுக் கட்சியே கொண்டுவந்தது. எனினும், மொட்டுக் கட்சி எதிர்பார்த்த அரசொன்று அமையவில்லை. எனவே, இரு தரப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு இணைந்து பயணித்தால் ரணிலுக்கு வெற்றி நிச்சயம். மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனிவழியில் சென்றால் இரு தரப்புகளுக்கும் பின்னடைவு ஏற்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.