மும்பையில் பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து!

மும்பையில் பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது.

மேம்பாலத்தில் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக, காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஜே.ஜே. மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பள்ளிப் பேருந்து ஒன்று நிலைத்தடுமாறி சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது.

பள்ளி மாணவர்கள் 20 பேர் பேருந்தில் இருந்துள்ளனர். இதில் இர்ஃபான் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் அவர் ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் லாலு குமார் சாந்துவை (24) காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் பேருந்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.