இலங்கைக்குக் கஞ்சா கடத்த இராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்த இலங்கையர் உட்பட மூவர் கைது! – கஞ்சா மற்றும் இலங்கை ரூபா நோட்டுகள் பறிமுதல்.

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்துவதற்காக இராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இலங்கை ரூபா நோட்டுகளைப் பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவுப் பொலிஸார் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப் படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடி கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வதற்கு இலங்கை புத்தளம் மாவட்டம், கற்பிட்டி யைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் (வயது 35) என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி விமான மூலம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜூன் முதலாம் திகதி காலை சென்னை வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து இராமேஸ்வரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் அவர் பெங்களூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் பலரைச் சந்தித்து கஞ்சா கொள்முதல் செய்வதற்காக விசாரித்தார் என்று சொல்லப்படுகின்றது.

பின்னர் இராமேஸ்வரம், புதுரோடு பகுதியைச் சேர்ந்த உமா செல்வம் (வயது 45) என்பவர் மூலம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி தியாகராஜன் (வயது 57) என்பவரைச் சந்தித்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

மேலும், அந்தோணி பிரவீனுக்கு இலங்கை, மன்னாரைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இரண்டு தவணையாக கஞ்சா கொள்முதல் செய்ய 2 இலட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

அந்தப் பணத்தில் அந்தோணி பிரவீன் கஞ்சா தரம் குறித்து தெரிந்துகொள்வதற்காக முதல் கட்டமாக 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை ரூ. 35 ஆயிரத்துக்குத் தியாகராஜனிடம் வாங்கியுள்ளார்.

இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு இராமேஸ்வரம் ஆய்வாளர் நல்லுசாமி மற்றும் காவலர் பால முரளி தலைமையிலான பொலிஸார் அந்தோணி பிரவீனை சுற்றிவளைத்து கைது செய்து அவர் தங்கி இருந்த அறையைச் சோதனை செய்த போது அவரிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இலங்கை ரூபா 50 ஆயிரம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து அந்தோணி பிரவீனை தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் தியாகராஜனிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி உமா செல்வம் என்பவர் மூலம் நாட்டுப் படகில் இன்னும் ஓரிரு நாட்களில் சுமார் 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய மூட்டையை இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தியாகராஜன், உமா செல்வம் இருவரையும் கைது செய்த பொலிஸார், இலங்கையைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.