மதுசாரம் என நினைத்து விஷத் திரவம் பருகிய மீனவர்களில் நால்வர் மரணம்! – இருவரின் உடல் நிலை மோசம்.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் மதுசாரம் என நினைத்து விஷத் திரவத்தைப் பருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இரண்டு மீனவர்களின் உடல் நிலை மோசமாக இருக்கின்றது என்று கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பலநாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த 6 மீனவர்களே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு கடலில் மிதந்த போத்தல்களைக் கண்டு மதுசாரம் என நினைத்து அவர்கள் பருகியுள்ளனர்.

குறித்த 6 மீனவர்களும் அதனால் பாதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அறிவித்துள்ளனர் என்று கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சுசந்த கஹவத்த,

“தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்குப்பணி நிமித்தம் சென்ற ஆறு மீனவர்கள் நேற்று இரவு கடலில் சில போத்தல்கள் மிதப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

மதுபானம் என நம்பி, அந்தப் போத்தல்களில் இருந்த திரவத்தை இன்று காலை பருகியுள்ளனர் . இதனால் 6 பணியாளர்களும் சுகவீனமடைந்துள்ளனர்.

செய்தி கிடைத்ததன் பின்னர், கப்பல் இருக்கும் இடம் கண்காணிக்கப்பட்டது.

இதுவரை நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல் நிலை மோசமாக இருக்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.