விடைபெறுகின்றாரா மஹிந்தர்? – நாமல்தான் பிரதமர் வேட்பாளராம்.

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ முன்னின்று தேர்தலையும் அவரே வழிநடத்துவார்.”

இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினேன். இப்போது விமல் தரப்பு தனிவழி சென்றாலும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கே கிடைக்கப் பெறும்.

வாசுதேவ நாணயக்காரதான் எமது பக்கம் முதலில் வருவார். பின்னர் உதய கம்மன்பிலவுக்கும் வரவேண்டியேற்படும். திலீப் ஜயவீரவும் கோட்டாபய ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார். அந்தவகையில் சர்வஜன அதிகாரத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் வந்து, மொட்டுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவார்கள். இன்னும் இரு வாரங்களில் இது நடக்கும்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என நான் இன்னும் நம்புகின்றேன். அவ்வாறு நடந்தால் தம்மிக்க பெரேரா அல்லது நாமல் ராஜபக்ஷ ஆகியோரில் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவார்கள். அந்தத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ முன்னின்று தேர்தலையும் அவரே வழிநடத்துவார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.