யானையைக் கண்டு பயந்து ஓட்டோவைத் திருப்ப முயன்ற சாரதி வானில் மோதி சாவு!

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் ஹயஸ் வானும் ஓட்டோவும் மோதியதில் ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ஓட்டோவின் சாரதி, வீதியைக் கடந்த காட்டு யானையைக் கண்டு, பயந்து, தனது ஓட்டோவைத் திருப்ப முற்பட்டபோது, ஓட்டோ புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ஹயஸ் வான் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் இராஜாங்கனை – சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வீதியின் ஊடாகத் தினமும் காட்டு யானைகள் நடமாடுவதாலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தப்படுவதாலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த வீதியில் இதுபோன்ற பல விபத்துக்கள் இடம்பெற்று, பல உயிர்கள் பலியாகியுள்ளனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.