மூழ்கிக் கொண்டிருந்த கப்பலை கரை சேர்த்துள்ளேன் – ரணில்.

நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் (30) மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

“ஒன்றாக வெல்வோம் – நாம் மாத்தறை ” என்ற தொனிப்பொருளில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக் கூட்டத்தில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை முன்னிறுத்தி கட்சி அரசியலை விட்டு விலகி இந்த வேலைத் திட்டத்தில் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற பாடத்தை அந்த சமயம் தன்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

மூழ்கவிருந்த கப்பலை என்னிடம் ஒப்படைத்ததாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கூறினார். ஆனால், என்னிடம் டைட்டானிக் கப்பல் ஒன்றே ஒப்படைக்கப்பட்டது.

அதனை நான் தற்போது துறைமுகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன். இருந்த மாலுமிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.பனிப் பாறைக்குப் பயந்து அதனைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை.

கப்பல் மூழ்கி நாம் பலியாவதா? அல்லது கரையொதுங்குவதா என்ற கேள்வியே இருந்தது.

நாம் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளோம். இந்தக் கப்பலுடன் நாம் என்ன செய்யப் போகிறோம்.

இந்தக் கப்பலைத் திருத்திக் கொண்டு இன்னும் 50 – 100 வருடங்களுக்குப் பாதுகாப்பாக பயணிக்கப் போகிறோமா? அல்லது தப்பியோடி மாலுமி ஒருவரிடம் கப்பலை ஒப்படைப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

நான் இந்த இடத்திற்கு வரும்போது மாத்தறை மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த துயரங்கள் நினைவுக்கு வந்தது.

2022ஆம் ஆண்டு தமிழ், சிங்களப் புத்தாண்டில் நான் மாத்தறை, கம்புறுகமுவ பிரதேசத்தில் இருந்தேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இருந்தது. அங்கு மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் இருந்தன.

மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். தமிழ், சிங்கள புத்தாண்டு சுப வேளையிலும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். என் வாழ்நாளில் இவ்வாறான சம்பவங்களை இதற்குமுன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை.

ஆண், பெண் பாகுபாடின்றி மக்கள் வரிசையில் இருந்தனர். ஒருநாள் அவர்கள் முட்டி மோதிக் கொண்டனர்.

அவ்வாறான ஒரு நிலை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட இடமளிக்க முடியாது என்று நான் தீர்மானித்தேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் பேசியிருந்தேன், உலக வங்கியின் அதிகாரிகளின் பதிலை அப்போதைய ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தேன்.

அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கேட்டிருந்தேன். எவ்வாறாயினும், இறுதியில் எனக்கு இதனைப் பொறுப்பேற்க நேரிட்டது. உலக வரலாற்றில் புதிய முறையில் நான் இதனை பொறுப்பேற்றேன்.

அனைவரும் தப்பியோடிய பின்னர், எனக்குப் பொறுப்பேற்குமாறு கூறினார்கள்.

அரசியலமைப்பின் படி பிரதமர் பதவி விலகினால், ஆளும் கட்சிக்கு அதிகாரத்தைப் பொறுப்பேற்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி அதனைப் பொறுப்பேற்க வேண்டும்.

விசேடமாக ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தது. ஆனால் அனைவரும் தப்பியோடினர். பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை அதனால் பதவியை பொறுப்பேற்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர். அவ்வாறான நிலையே அன்று இருந்தது.

எங்களின் பொருளாதார முறைமை மட்டும் அன்று உடைந்துவிழவில்லை. எமது அரசியல் முறைமையும் உடைந்துவிட்டது.

எவ்வாறாயினும், நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். இது வெற்றியடையாது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததுடன், என் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது.

ஐ.எம்.எப் உடன் பேச்சு நடத்தினேன். இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. முதல் பணியாக விவசாயத்தில் கவனம் செலுத்தினோம். 2023ஆம் ஆண்டு சிறுபோகத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்குமாறு கேட்டுக் கொண்டோம். எமது விவசாயிகள் அதனைச் செய்தார்கள். எமது உற்பத்தியில் பெரும் பகுதியில் விவசாயமே பங்காற்றியது.

2023ஆம் ஆண்டு பெரும்போகமும் வெற்றியளித்தது. 2023 – 2024 சிறுபோகமும் வெற்றியளித்தது. 2024ஆம் ஆண்டு பெரும்போகமும் வெற்றியளித்தது.

இதனால், சித்திரைப் புத்தாண்டு, வெசாக், பொசொன், தன்சல் ஆகியவற்றை இவ்வாறு கொண்டாடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தெற்கு மக்களும் உதவினார்கள்.

இரண்டாவதாக, சுற்றுலாத் துறை வளர்ச்சியை ஏற்படுத்தினோம். இஸ்ரேல், உக்ரெய்ன், ரஸ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இங்கு வருவதற்கு ஊக்கமளித்தோம். இதன்மூலம் எமக்குத் தேவையான அந்நியச் செலாவணி கிடைத்தது.

வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இன்னுமொரு பகுதி கிடைத்தது. இவற்றின் மூலமே நாம் இதனை முன்னேற்றினோம். பிரச்சினைகள் இருந்தன.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாக ஐ.எம்.எப். உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு வாக்குறுதியளித்துள்ளோம். அதாவது எமக்கு பணத்தை அச்சிட முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியாது. எனவே, எமக்கு வேறு வருமானம் தேவைப்பட்டது.

வற் வரியை அதிகரித்தோம். இது மிகக் கடினமான தீர்மானமாக இருந்தாலும் நாம் அந்தத் தீர்மானத்தை எடுத்தோம்.

இன்று நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தையும் நாம் முன்னேற்ற வேண்டியுள்ளது.

ஆனால் வற் வரியை இனியும் அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் செல்வந்தர்களிடம் விசேட வரியொன்றை அறவிட நேரிடும்.

இது சாதாரண மக்களைப் பாதிக்காது. எனவே, கடினமான தீர்மானங்களை எடுத்தோம். அதன்பின்னர் நாம் அஸ்வெசும திட்டத்தை அறிமுகப்படுத்தி சமூர்த்தியைப் போன்று மும்மடங்கு நிவாரணத்தை வழங்கினோம்.

16 இலட்ச பேருக்குப் பதிலாக 24 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கினோம். வங்குரோத்து இல்லாமல் நல்ல நிலையில் இருந்தபோது செய்ய முடியாத பல விடங்களை நாடு வங்குரோத்து அடைந்துள்ள இந்த நேரத்தில் செய்கின்றோம்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் குறைந்தவருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசியை வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கினோம்.

அரசாங்க காணிகள் உள்ள அனைவருக்கும் நாம் காணி உறுதிகளை வழங்குகிறோம். அடுத்த வாரம் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 2 இலட்சம் பேருக்கு குடியிருக்கும் வீடுகளின் உரிமத்தை வழங்கவுள்ளோம்.

24 இலட்சம் குடும்பங்கள் தற்போது அஸ்வெசும நிவாரணம் பெறுகின்றனர். 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகள் கிடைக்கவுள்ளன. குறைந்தவருமானம் பெறும் இரண்டரைஈலட்சம் பேருக்கு அடிக்குமாடி குடியிருப்பிற்கான உரிமம் கிடைக்கவுள்ளது.

நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாம் இந்த நெருக்கடியான காலத்தில் பலன்களை உங்களுக்குத் தந்துள்ளோம்.

தற்போது நாம் எதிர்காலப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டியுள்ளது. ஒரே மூச்சில் அந்த நிலையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில் எமக்கு கடனை மீளச் செலுத்த நேரிடும்.

ஆனால் கடன் செலுத்தும் சக்தி எம்மிடம் இன்னும் இல்லை. அத்துடன், முழுக் கடனையும் உடனடியாக செலுத்த வேண்டிய தேவை இல்லை. எமது முழுமையான கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 108 வீதமாக உள்ளது.

எனவே, எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எமக்கு கால அவகாசம் தேவையெனக் கேட்டோம். ஒருபுறம், மேற்கத்தேய நாடுகள் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மறுபுறம், சீனாவுடன் பேசினோம். தற்போது இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எமக்கு கடனை செலுத்தாமல் இருக்க 5 வருட கால அவகாசம் இருக்கிறது. அதன்பின்னர் 2042ஆம் ஆண்டுவரை கடன் செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் செலுத்த வேண்டிய தொகையும் குறையும். ஐ.எம்.எப். வேலைத் திட்டத்தை முன்னெடுத்தால் இந்த சலுகைகளைப் பெற முடியும் என்று எமக்கு அறிவிக்கப்பட்டது.

ஐ.எம்.எப். வேலைத் திட்டத்துடன் இணங்கி, அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது என்ற இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். இந்த இரண்டு இணக்கப்பாடுகளையும் நாம் எட்டியுள்ளோம். இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.

இதனைத்தவிர, எமக்கு கடன் வழங்கிய நாடுகளைத் தவிர பிணை முறிகள் மற்றும் தனியாரிடமிருந்தும் நாம் உத்தியோகபூர்வமாக கடன் பெற்றுள்ளோம்.

இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், பிணை முறிகளுக்கு கடன் வழங்கிய தரப்பினர் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது அதையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தைகளையும் அடுத்த வாரம் வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த மூன்று உடன்படிக்கைகளையும் சேர்த்துக் கொள்வோம் என்று அரச நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்தேன்.

இது குறித்து விரிவாக நான் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளேன். இவற்றை அரச நிதி தொடர்பான குழு ஆராய்ந்த பின்னர் வாக்கெடுப்பிற்கு செல்வோம் என்று நான் கூறியுள்ளேன்.

பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதை உலகம் அறிய விரும்புகிறது. எனவே, நான் இவற்றை சமர்ப்பிக்கிறேன்.

இதனைவிட சிறந்த தீர்வோ, மாற்றுவழியோ இருக்கிறது என்று எந்தவொரு கட்சியாவது கூறினால், அவர்களுக்கு வொஷிங்டன் சென்று ஐ.எம்.எப். உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

அவர்களுக்கான பயணச் சீட்டையும், தங்குமிட வசதிகளையும் அரசாங்கம் ஏற்பதற்கு தயாராக இருக்கிறது.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்வைக் கொண்டுவந்தால் அதுகுறித்தும் நாம் பாராளுமன்றத்தில் கலந்தாலோசிக்க முடியும். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், பழைய முறையில் அரசியல் செய்ய முடியாது.

நாம் எடுக்கும் தீர்மானம் எங்கள் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து நாம் விலகிச் சென்றால், நாம் எவ்வாறு தனித்துப் பயணிக்கப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது.

இந்த உடன்படிக்கைகள் இல்லாமல் நாட்டை முன்நோக்கி நகர்த்த முடியுமா? இந்த உடன்படிக்கைகள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இருக்கிறதா? அல்லது வரிசை யுகத்திற்கு மீண்டும் செல்வதா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும். இந்த சம்பிரதாய அரசியலில் இருந்து விடுபட வேண்டும். தீர்க்கமான தீர்மானமொன்றை நாம் எடுக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாம் எவ்வாறு பணம் செலுத்தப் போகிறோம்? எரிபொருளுக்கு பணம் செலுத்தப் போகிறோம்? எங்களுக்கு அந்நியச் செலாவணி இல்லையென்றால், நாம் கடன் பெறப் போகிறோமா? அப்படி செய்தால் இன்னும் 15 வருடங்களில் எழுந்துவர முடியாத, பழிகுழியில் மீண்டும் விழுவோம் என்பதை நான் உறுதியாக கூறிவைக்க விரும்புகிறேன்.

இதனை நான் எழுதித் தருகிறேன். இதனை செய்யப் போகிறோமா அல்லது நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கப் போகிறோமா? நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும்.

உங்களது எதிர்காலத்தை மையப்படுத்தியே இந்தத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அடுத்த 5 – 10 வருடங்களில் உங்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிற வேண்டும் என்பதை மையப்படுத்தி தீர்மானங்கள் எடுக்க வேண்டும். இளைஞர்களுக்காக இந்தத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும். மீண்டும் நெருக்கடிக்குள் செல்வதா அல்லது அபிவிருத்தியடைந்த நாடாக முன்நோக்கிச் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களின் எதிர்காலமே இதில் தங்கியுள்ளது.

இந்தத் தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டும். இதற்காகவே நாட்டிற்காக பணியாற்றுவோம் என்று அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் கூறுகிறேன்.

நான் அடங்களாக இந்த அமைச்சரவை எந்தக் கட்சிக்குச் சொந்தமானது எனக் கேட்கின்றனர். நாட்டிற்காக ஒன்றுபட்டவர்களே இதில் இருக்கின்றனர்.

இதில் மொட்டுக் கட்சியினர் இருக்கின்றனர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இருக்கின்றனர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர், ஐக்கிய தேசியக் கட்சியினர் இருக்கின்றனர்.

நாம் நாட்டிற்காக ஒன்றிணைந்துள்ளோம். எமக்கென்று ஒரு கட்சி இல்லை. வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

புதிய அரசியல் முறைமையொன்றை நாம் ஆரம்பித்துள்ளோம். நாட்டிற்கு முதலிடம். அதன்பின்னரே கட்சி. மொட்டுக் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்கட்சியிலும் இருக்கின்றனர்.

ஆனால் நாட்டிற்காக சிந்தித்து பணியாற்றும் பலரே தற்போது அரசாங்கத்தில் இருக்கின்றனர். நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தப் பணத்தில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் இந்தப் புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.

எதிர்க்காலத்தில் தலைமைத்துவத்தை எவ்வாறு பெறுவது? எவ்வாறு இந்தப் பணிகளை முன்னெடுப்பது என்று என்னிடம் கற்றுக்கொள்ளவும் முடியும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசியல் முறையை மாற்றுவோம். தினமும் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதில் பலனில்லை.

நான் அவ்வாறு செய்யவில்லை. நாம் புதிய பாதையில் பயணிக்கிறோம். இதற்காக அர்ப்பணிக்க வேண்டும். நான் அதற்காக அர்ப்பணித்துள்ளேன்.

அடுத்த தேர்தலில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அனைவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பதைத் தீர்மானிக்கலாம். அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பதைத் தீர்மானிக்கலாம்.

அந்தத் தீர்மானங்களுக்கு இணங்க செயற்பட நானும் தயார். எங்களுக்கு இன்று தனிநபர், கட்சி சார்ப்பு அரசியல் இல்லை. நாம் நாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டை முன்னிலைப்படுத்து முன்நோக்கிப் பயணிப்போம் என்று கூறவிரும்புகிறேன்.

இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தல்கள் வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் வருகிறது.

அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெற இருகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த பணம் இல்லை.

அதனால் அதனை இறுதியாக நடத்துமாறு கோரினார்கள். அதுகுறித்து கூச்சலிடத் தேவையில்லை. ஊர்வலம் வர முன்னர் மேளதாளங்கள் அவசியமில்லை.

இதுகுறித்தும் நாம் தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும், நாம் எதிர்காலம் குறித்து சிந்தித்து பணியாற்றுவோம். அண்மைக்காலமாக நீங்கள் பட்ட துன்பம் குறித்து கவலையடைகிறேன். இந்த அரசாங்கம் அது தொடர்பில் கவலைகொள்கிறது.

அடுத்ததாக நாம் எடுத்த தீர்மானங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றிணையுமாறு நாம் அனைவரையும் அழைக்கிறேன். எதிர்காலத்தில் புதிய பாதையில் பயணிக்க வருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.