விபத்தில் எரிந்து பொசுங்கிய லம்போர்கினி ஓட்டுநர்

‘சூப்பர் கார்’ என்று குறிப்பிடப்படும் லம்போர்கினி ஒன்றை மலேசியாவில் ஓட்டிச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க ஆடவர், விபத்தில் சிக்கி மாண்டார்.

விபத்துக்குள்ளானதை அடுத்து கார் தீப்பற்றிக்கொண்டது. ஆடவர் தீக்கு இரையானதாக ‘த ஸ்டார்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஜூன் 30ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தீப்பற்றி எரிந்த காரில் இருந்த பெண் பயணியை, அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் வெளியேற்றிவிட்டனர். காயங்களுடன் அவரை வாகனமோட்டிகள் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

பெண்டோங் தீயணைப்பு, மீட்புப் படையினர் தகவல் அறிந்து சுமார் அரை மணி நேரத்தில் சம்பவ இடத்தை அடைந்தனர்.

ஆனால், அதற்குள் முழு காரும் எரிந்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஓட்டுநர் வெளிவர முடியாமல் தம் இருக்கையில் சிக்கி இருந்ததாகவும் அறியப்படுகிறது.

ஓட்டுநரின் உடலை தீயணைப்பாளர்கள் எரிந்துபோன காரிலிருந்து வெளியேற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.