தமிழகத்தில் 99% காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள்.

தமிழகத்தில் உள்ள 99 விழுக்காடு காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அங்கு பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் கை கொடுக்கும் என காவல்துறை கருதியது.

ஆனால் கேமராக்களில் பதிவான காட்சிகள் சிலரால் முறைகேடாக கையாளப்பட்டது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் நிலையங்களில் நடக்கும் பல்வேறு வகையான அத்துமீறல்களை கண்காணிக்க போதுமான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் நிஜாமுதின் என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

திங்கள்கிழமை மனு மீதான விசாரணையின்போது தமிழகம் முழுவதும் உள்ள 1,500க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் 99 விழுக்காடு நிலையங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பதிவுகள் முறையாக பத்திரப்படுத்தப்படுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் திருடு போகும் வாகனங்களை கண்டுபிடிக்க ஏதுவாக சென்னையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் 500 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருடு போன வாகனங்கள் அந்தச் சாலை சந்திப்புகளின் வழி சென்றால் நவீன கேமராக்கள் அந்த வாகனத்தை புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும். இதனால் குற்றவாளிகள் பிடிபடும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என காவல்துறை கூறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.