பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடல் நாளை மாலை அக்கினியுடன் சங்கமம் – இறுதி ஊர்வலத்தில் பலரும் பங்கேற்க ஏற்பாடு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் திருகோணமலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது.

பெருந்தலைவரின் புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் அன்னாரின் புகழுடலுக்கு உணர்வுபூர்மாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

அதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்பாக இறுதி அஞ்சலிகளை திருகோணமலை, தபால் கந்தோர் வீதியிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் செலுத்துமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றார்கள். சமயச் சடங்குகள் அதன்பின் ஆரம்பமாகும். அஞ்சலிக் கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி அன்னாரின் புகழுடல் தகனத்துக்காக மாலை 3 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவரின் இறுதி ஊர்வலத்தில் அரசியல்வாதிகள், மத குருமார்கள், கல்விச் சமூகத்தினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.