பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதினாறு வயது சிறுவன் பள்ளியில் தனது பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றபோது திடீரென பள்ளி நடைபாதையில் சரிந்து விழுந்துள்ளான். இச்சம்பவம் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் சிறுவன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு சாதாரணமாக நடப்பதைக் காட்டுகிறது. திடீரென்று, அவர் சரிந்து விழுகிறார். உடனடியாக அருகிலுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதற்றத்துடன் ஓடி வருகின்றனர். அந்த சிறுவனுக்கு உதவ முயற்சித்த போதிலும் அவன் சரிந்து விழுகிறான். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் இதய செயலிழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பார்வையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. மேலும் அந்த சிறுவனுக்கு பெயர் யதேந்திரா என்றும், அவர் மாரடைப்பு ஏற்பட்டுதான் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற ஒரு சோகமான நிகழ்வு மிகவும் இளம் வயதினருக்கு ஏற்படக்கூடுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவரது மரணத்திற்கான சரியான காரணம் குறித்து பள்ளி தரப்பில் கேட்டதாகவும், அதற்கு குடும்பத்தினர் பதில் சொல்ல மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் யதேந்திராவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிய, பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் , ஆனால் அதற்கு மாணவனின் குடும்பத்தினர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் உயிரிழந்த யதேந்திராவிற்கு சிறுவயதில் இருந்தே இதயத்தில் ஓட்டை இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்ததிற்கு முந்தைய நாள் தான் யதேந்திராவுக்கு 16 வயது பிறந்த நாள் கொண்டாடியதாக சிறுவனின் பெற்றோர்கள் கூறினர். தனது நண்பர்களை வரவழைத்து கேக் வெட்டி, புகைப்படங்கள் எடுத்து நேற்று கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இன்று யதேந்திரா உயிரிழந்திருப்பது நம்பமுடியாத விஷயமாக இருப்பதாக கண்ணீர் மல்க பேசியுள்ளனர். தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கம் காரணமாக சிறுவயதில் இருந்தே பல்வேறு உடல்நல பாதிப்புகளை பலரும் சந்தித்து வரும்நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.