சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டு சிறை.

திண்டிவனம் அருகே 2019ஆம் ஆண்டு இரு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த 2019ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அதில் 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

விசாரணையில், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அந்தச் சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அவர்களின் தாய் மாமாவான கஜேந்திரன், தாத்தா துரைசாமி, உறவினர்களான தீனதயாளன், அஜித் குமார், பிரபாகரன் உள்ளிட்ட 15 பேரும் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கும் மேலாக அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 15 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.