ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது! – அடித்துக் கூறுகின்றது ஐ.தே.க..

“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவோ, அரசோ எந்தவித மறைமுக நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை. ஆனால், எதிர்க்கட்சியே தேர்தலைப் பிற்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றது. ஆனால், உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகமுமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு ஒரு சிலர் மறைமுகமாகச் செயற்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் வியாபாரி ஒருவரால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை கேள்விக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாகச் செயற்பட்டு, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதை அமைச்சரவையில் உறுதிப்படுத்தியதுடன், உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை செல்லுபடியற்றதாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தேவையான ஆலாேசனைகளை வழங்கி இருந்தார். அதன் பிரகாரம் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், குறித்த வழக்கைத் தாக்கல் செய்த நபர், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய நண்பர். இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்குச் சதித்திட்டங்களை மேற்கொள்பவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதேபோன்று தற்போது மீண்டும் தேர்தலைப் பிற்பாேடும் நோக்கில் சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு நாட்டுக்குள் குழப்பகரமான நிலைமை ஒன்றை ஏற்படுத்தி, அதனை ரணில் விக்கிரமசிங்கவின் மேல் சுமத்துவதற்கான நடவடிக்கையே இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதைத் தடுப்பதற்கும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதற்குமே இவ்வாறான நடவடிக்கைகளைச் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அவர் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவார். அதேபோன்று பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.