சென்னையில் குழந்தை திருமணத்தை பெற்றோரே நடத்தி வைத்த அதிர்ச்சி சம்பவம் !

சென்னையில் குழந்தை திருமணத்தை பெற்றோரே நடத்தி வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக குழந்தை திருமணங்கள் நடப்பதாக வெளியான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குழந்தை திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்து இருந்தார்.

தற்போது சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளதாக இவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. மேலும் ஆதாரமாக புகைப்படமும் கிடைத்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிதா, அதிகாரிகளுடன் சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். முதலில் இதனை மறுத்த சிறுவனின் பெற்றோர், அதிகாரிகள் புகைப்படத்தை காட்டிய பிறகு கடந்த 12 ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சிறுவன் சிறுமியை சிறார் காப்பகத்தில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்துவது குழந்தைகள் திருமண தடைச்சட்டப்படி, பெருங்குற்றமாகும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் திருமணம் செய்துகொண்ட மணமகன், மணமக்களின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.