அலி சப்ரி ரஹீம் எம்.பி. இன்று கைதாகிப் பிணையில் விடுவிப்பு.

கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதிவானுமான திருமதி அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை ஒன்றை கடந்த 8 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று காலை 9.30 மணியளவில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு ஆஜராகச் சென்றிருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரைப் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் இந்திக தென்னக்கோன் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அத்துடன், எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்குப் பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான முஹம்மது இப்திகார் மற்றும் முஹம்மது அஸீம் ஆகிய இருவரும் ஆஜராகியிருந்தனர்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொறுப்புக் கூறும் வழக்கு கடந்த 8 ஆம் திகதி கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் குறித்த வழக்கு விசாரணைக்குச் சமூகமளிக்காத நிலையில், நீதிவான் இவ்வாறு கைதுக்கான திறந்த பிடியாணை உத்தரவை வழங்கியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“கற்பிட்டி – குறிஞ்சிப்பிட்டி பகுதியில் உள்ள மஸ்ஜிதுக்குச் சொந்தமான மதரஸா கட்டடம் ஒன்றைத் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் பலவந்தமாகக் கையகப்படுத்தி தமது சொந்தச் சொத்தாக வைத்திருப்பதாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் எனக்குத் தெரியப்படுத்தினார்கள்.

இது தொடர்பில் கற்பிட்டி பிரதேச செயலாளர் உட்பட கலாசார அமைச்சும் குறித்த கட்டடத்தை மஸ்ஜித் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டனர்.

எனினும், குறித்த நிறுவனம் அந்த மதரஸாக் கட்டடத்தை உரிய தரப்பினரிடம் ஒப்படைக்காமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டேபோனது. அமைப்பொன்று மதரஸாவுக்காக வக்பு செய்த அந்தக் கட்டடத்தைத் தமக்கு ஏற்றவாறு அந்த நிறுவனம் மாற்றியமைத்தும் கொண்டது.

இதனையடுத்து, மஸ்ஜித் நிர்வாகத்தினரையும், அந்த அரச சார்பற்ற நிறுவனத்தையும் அழைத்துப் பேசினேன். அந்தச் சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் பேசிய விடயங்களையே பேசிக் கொண்டே இருந்தனர்.

அப்போது அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு பொலிஸாரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது அங்கு இருந்த பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த அரச சார்பற்ற நிறுவனம் பலவந்தமாகக் கையகப்படுத்தி வைத்திருந்த மஸ்ஜிதுக்குச் சொந்தமான மதரஸா கட்டடத்தை இழுத்து மூடி அதன் திறப்பை கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.

இதனைக் காரணம் காட்டி அந்த அரச சார்பற்ற நிறுவனத்தினர் எனக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 8 ஆம் திகதி அந்த வழக்கு விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டது. அன்றைய தினம் நிகழ்வொன்றுக்குப் பிரதமர் புத்தளத்துக்கு வருகை தந்தார். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் என்னால் வழக்கு விசாரணைக்காகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி கற்பிட்டி பொலிஸ் நிலைய நீதிமன்றப் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அறிவித்தேன்.

எனினும், அன்றைய தினம் எனக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை ஒன்றைப் பிறப்பித்திருந்தது. எப்போதும் சட்டத்தை மதித்துச் செயற்படும் நான் கற்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று ஆஜராகியபோது அவர்கள் என்னைக் கைது செய்து பதில் நீதிவான் முன்னிலைப்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன்.

சமூகத்துக்காகப் பணியாற்றும்போது, அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கும்போது இவ்வாறான சோதனைகள் வருவது வழக்கமாகும். நாட்டின் சட்டத்தையும் மதிக்க வேண்டும். எங்களை நம்பியிருக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். நான் என்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாலும் மக்களுக்கான சேவையைத் தொடர்ந்தும் முன்னேடுப்பேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.