தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு! – யாழில் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பம்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு இன்று மாலை 3 மணியளவில் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.
கூட்டணியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு, கட்சிக் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் மாநாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
இதன்போது மங்கள விளக்கின் முதல் சுடரைப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் எம்.பி., தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சிறப்புப் பேச்சாளரான யாழ். பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், யாழ். மாநகர முன்னாள் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மயூரன், பேராசிரியர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஏற்றிவைத்தனர்.
போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கான பொது நினைவுச்சுடரை விக்னேஸ்வரன் எம்.பி. ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் அண்மையில் உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனங்கள், கலை நிகழ்வுகள், சிறப்புப் பேச்சுக்கள் இடம்பெற்று விருந்தினர் கௌரவிப்புக்களும் நடைபெறுகின்றன.