செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு: மருத்துவனையில் அனுமதி

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, ஓமந்தூராா் அரசு மருத்துமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் 2023 ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தது. இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் ரத்து குழாய் அடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து உயா்நீதிமன்ற உத்தரவு படி, அவருக்கு ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவா் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்தச் சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட பின் தனது இதயப் பகுதியில் அசெளகரியமாக இருப்பதாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஆனால், உயா் சிகிச்சைக்காக மருத்துவா்கள் பரிந்துரையின் பேரில், ஓமந்தூராா் மருத்துமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது வழக்கில் பிணை கோரி, உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.