அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. கேரளாவில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

இந்திய மாநிலம் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பின்னர் சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கவலைக்கிடமாக இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த 214 பேர் கண்காணிப்பில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.