கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்.

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது.

கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

கட்சியின் செயல்நிலை உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நினைவேந்தலின்போது, அண்மையில் மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனுக்கும், தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும் ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கும் (பனாகொட மகேஸ்வரன்) அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.