கட்டாய தகனத்துக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவதற்கு அரசு முடிவு.

கொரோனாத் தொற்றுநோய்களின்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கூட்டு அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரோனாவின் மருத்துவ மேலாண்மை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் முறையாகத் தகனம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, கொரோனாத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் தகனம் செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்புக் கோரும் நோக்கில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.