செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தல் – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் தெரிந்துகொள்வதற்காக இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதி முற்பகல் 9 – 11 மணி வரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்படும்.

தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் தொடர்பில் அன்றைய தினமே முற்பகல் 9 – 11.30 மணி வரை ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடியும். எதிர்த் தரப்பு வேட்பாளர் அல்லது அவர் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நபர்களால் இந்த ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் சகல வேட்பாளர்களும் கட்டுப்பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கமைய தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாகச் செலுத்த வேண்டும்.

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) முதல் வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை காலை 8.30 முதல் மாலை 4.15 வரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான நிதி அதிகாரியால் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.