இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, உமா ஷேத்ரி 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஸ்மிருந்தி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷ் 14 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரபோதனி, சச்சினி நிஷன்சலா மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்னே மற்றும் கேப்டன் சமாரி அத்தப்பத்து களமிறங்கினர். விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் சமாரி அத்தப்பத்து மற்றும் ஹர்சிதா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சமாரி அத்தப்பத்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய கவிஷா தில்ஹாரி அதிரடியாக 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஹர்சிதா சமரவிக்கிரம 69 ரன்களுடனும் (6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), கவிஷா தில்ஹாரி 30 ரன்களுடனும் (ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.