கனடா செல்ல இருந்த இளைஞன் சடலமாக ஏரியில் ….

மல்லாவி வவுனிக்குளம், குளத்தில் இருந்து கனடா செல்ல தயாராகி கொண்டிருந்த இளைஞனின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, யோகபுரம், மல்லாவியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தராசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் ஓகஸ்ட் முதலாம் திகதி கனடா செல்லத் தயாராக இருந்ததாகவும், அதற்காக 20 இலட்சம் ரூபாவை டொலர்களுக்கு மாற்றுவதற்காகச் சென்றதாகவும், இதன்போதே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்று (30) வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகவும், பின்னர் குறித்த இளைஞனின் தொலைபேசி அழைப்பிலிருந்து பதில் வரவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய போது குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் வவுனிக்குளம் ஏரிக்கரைக்கு அருகில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பிரதேசவாசிகளும் , பொலிஸாரும் இணைந்து அப்பகுதியில் இளைஞனை தேடியபோது வவுனிக்குளம் குளத்தில் இளைஞனின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனிடமிருந்த பணத்தை எடுப்பதற்காக இளைஞன் கொல்லப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்களும் பொலிஸாரும் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.