பையில் குழந்தை கடத்தல்; பெண்ணைத் தேடுகிறது காவல்துறை.

வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியில் தொழிலாளியாக இருப்பவர் கோவிந்தன், 25.

இவரது மனைவி சின்னி. பிரசவத்துக்காக சின்னி ஜூலை 27ஆம் தேதி இரவு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அதே நாள் இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் பிரசவ வாா்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்தாா்.

அதன் பின் குழந்தைநல வார்டுக்கு தாயார் சின்னியுடன் குழந்தையையும் மாற்றி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 9 மணியளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்றார்.

அந்தப் பெண் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், குழந்தையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறி சின்னியிடம் குழந்தையை வாங்கினார். பின்னர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கட்டைப் பை ஒன்றுடன் பெண் செல்வதும் அவருடன் ஒரு சிறுவன் இருப்பதும் தெரிந்தது. அந்தப் பைக்குள் குழந்தையை வைத்துப் பெண் கடத்தியதாகக் கூறிய காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.

குழந்தையுடன் பெண் எங்கே சென்றார் என்று காவல்துறையினர் தேடுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.