எவர் வெளியேறினாலும் மொட்டுக் கட்சி அழியாதாம் – மஹிந்தவின் சகா கூறுகின்றார்.

“மொட்டுக் கட்சியின் இருப்பு என்பது மஹிந்த ராஜபக்ஷவிடம்தான் தங்கியுள்ளது. எனவே, எவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சி வீழ்ச்சியடையாது. ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெல்வோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷவின் படத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் வந்தவர்களே கட்சி முடிவுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செயற்பட்டாலும் மக்களும், கட்சி ஆதரவாளர்களும் கட்சியுடன்தான் நிற்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவிடம்தான் கட்சி இருப்பு உள்ளது. எனவே, யார் வெளியேறினாலும் கட்சி விழாது. சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். அது விரைவில் தெரியவரும்.

ஜனாதிபதித் தேர்தலில் நாம்தான் வெல்வோம். புதிய வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் எமது வசமே உள்ளார். ஏனைய வேட்பாளர்களுக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெற முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.