யாழில் ரணில் – அங்கஜன் விசேட சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், யாழ். மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் எம்.பி.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை மையப்படுத்திய முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கும் போது எமது மக்கள் அவருக்கான ஆதரவை வழங்குவார்கள்.

அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, முன்னாள் போராளிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், வடக்கின் துரித பொருளாதார மேம்பாடு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் எங்கள் மக்களின் நீண்ட கால கனவுகளாக உள்ளன.

அவற்றை நிறைவேற்றவல்ல தலைமைத்துவத்தையே எங்கள் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த தலைவர் என்ற மதிப்பை மக்கள் உங்களிடத்தில் கொண்டுள்ளார்கள்.

ஆகவே, எங்கள் மக்கள் தொடர்பிலும் சிந்திக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.