ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட வேண்டிய மலையகத் தமிழர் அபிலாஷை ஆவணத்துக்கு முற்போக்குக் கூட்டணி ஏகமனதாக அங்கீகாரம்.

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காகத் தன்னால் முன்வைக்கப்பட்ட மலையகத் தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது எனக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது:-

“சஜித் பிரேமதாஸ தலைமையில் அரசு உருவாகின்ற போது, நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராயப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம், மேலதிக சில விடயங்கள் சேர்க்கைகளாகச் சேர்க்கப்பட்டும், சில திருத்தங்களுடனும் அரசியல் குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதாரக் காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு, காணி, கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து வாழ்வோருக்குக் கல்வி – வீட்டு வசதி, அரச பொது நிர்வாகக் கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை அடக்கிய ஆவணம், ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையாகக் கையெழுத்தாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.