சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்த மாகாண சபைகள் தேர்தல் சட்டம் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!விவாதம், வாக்கெடுப்பின்றி நடந்தது!!- மூன்றாம் வாசிப்பு விரைவில் சபைக்கு வரும்

மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீள இயங்கப் பண்ணுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பில் விவாதம் இன்றி – வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் செய்துள்ள பரிந்துரைகளைச் சட்டமூலத்தில் திருத்தங்களாகச் செய்வதற்காக அது நாடாளுமன்றத்தின் சட்டங்களுக்கான நிலையியற் குழுவுக்கு அனுப்பப்படுகின்றது. நிலையியற் குழுவின் திருத்தங்களோடு பெரும்பாலும் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் அது மீண்டும் நாடாளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று இரண்டாம் வாசிப்புக்காக அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, விமல் வீரவன்ஸ எம்.பி. மட்டும் அதற்குத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை இது என அவர் விசனம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.